நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
மாகாண சபை தேர்தலை நடாத்துவது குறித்து நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுடனும் எதிர்வரும் மாதத்தில் ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய முறையில் நடத்துவதா என்பதே தற்போதுள்ள பிரச்சினை.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் தேர்தலை நடத்தும் திகதியை நிச்சயமாகக் குறிப்பிட முடியாது.
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டதன் பின்னர் தாமதமில்லாமல் மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்த முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாகாண சபை தேர்தலை நடத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை ஆலையடிவேம்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு – கிழக்கில் தமிழரசுக் கட்சி பாரிய வெற்றியை பெற்றுள்ளது. அத்துடன் தென் பகுதியிலும் எதிர்க்கட்சிகள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளதால், அநுர அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அஞ்சுகின்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைத்து விட்டது என்பதற்காக அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களிலும் அவ்வாறு எதிர்பார்க்க முடியாது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மற்றும் மக்கள் சிந்தனைகளில் மாற்றம் வரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் மூலம், மக்கள் நிலமையை புரிந்திருக்கிறார்கள்.
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாத பின்னணியில் அடுத்து வரவுள்ள தேர்தல்களில் அரசாங்கம் வெற்றியை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், தேர்தலை பிற்போட முடியாது எனவும் வேறு காரணங்களைக் கூறி தேர்தலை மேலும் பிற்போட அனுமதிக்க இயலாது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
