மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றன.
இந்த நிலையில் மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
மின்சார சபை ஊழியர் சங்கங்கள் கடந்த 04ஆம் திகதி முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வந்தனர்.
இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு அதாவது இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மூன்று கட்டங்களாக நடத்த இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்கள் முடிவு செய்திருந்தன.
அதன்படி முதல் கட்டமாக, சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை கடந்த 04ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.
அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது 11 நாட்கள் கடந்த போதிலும், அதிகாரிகள் இதுவரை தமது பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தத் தவறிவிட்டதாக இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சட்டப் படி வேலை செய்யும் போராட்டத்தை தீவிரப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று (17) முதல் சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இரண்டாவது நாளாகவும் அந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்று மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்தால், தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
