மன்னார் காற்றாலை திட்டம்- எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம்!

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18) 47 ஆவது நாளாகவும் போரட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாளை (19) மாலை கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்றுடன் 47ஆவது நாட்களை கடக்கின்றது.

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் நாளை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன் மாலை 2 மணி அளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது கிராமங்களில் இருந்து கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 காற்றாலை மின் கோபுர வேலைத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், மன்னார் மாவட்டத்தில் கணிய மணல் அகழ்விற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது,
ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் 36 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளமையினால் மன்னார் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே மக்களின் பிரச்சினைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் கடந்த 47 நாட்களாக மன்னாரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

எனினும் அரசாங்கத்தால் இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் குறித்த கோரிக்கைகளை முன் வைத்து நாளை மாலை ஜனாதிபதி செயலகம் முன்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

குறித்த போராட்டத்தில் தென் பகுதியில் உள்ள சிங்கள சகோதரர்களும், மத தலைவர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.

எனவே குறித்த போராட்டத்தில் புத்திஜீவிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் இணைந்து ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர். அவர்களையும் வரவேற்கின்றோம்.

தேசத்தின் குரலாக நாளை (19) மாலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன் எமது குரல் ஒலிக்கும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply