யாழில் சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 05ஆவது நாளாக தொடர்கின்றது.
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி கடந்த 25ம் திகதி யாழ்.செம்மணியில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த பொது அமைப்புகள், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள், முஸ்லீம் மக்கள் எனப் பலரும் இணைந்து ஆதரவு வழங்கியுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
