இலங்கை மின்சார சபையில் ஏற்பட்ட நட்டம்- வெளிப்படுத்திய கோப் குழு!

இலங்கை மின்சார சபையில் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி 2015ஆம் ஆண்டு தவிர 2014 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் இலங்கை மின்சாரசபை 594,368 மில்லியன் ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சாரசபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தெரியவந்தது.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நஷ்டத்திற்குப் பல காரணங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய கோப் குழு, நிறுவனத்தில் ஊழியர்கள் இருக்கும் போது சபையின் சில செயற்பாடுகள் வெளித்தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.

இதுபோன்ற தொடர்ச்சியான நட்டங்கள் காரணமாக 2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டணங்கள் அதிக அளவில் அதிகரித்ததாகவும், இதன் காரணமாக மக்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டதாகவும் குழு சுட்டிக்காட்டியது.

எனினும் 2023க்குப் பின்னர் மின்சார சபை இலாபமீட்டும் நிலைக்குச் சென்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த காலத்தில் சுமார் 18 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதற்கு கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணம் அல்ல என்றும், மாறாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் செலுத்த வேண்டிய கடன் செலுத்த முடியாமையே காரணம் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

2014ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணம் போதுமானளவு திருத்தத்திற்கு உள்ளாகாமையால், திடீரென மின் கட்டணத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது என்றும் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் 24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply