நாட்டில் நீதித்துறை செயல்முறையை வலுப்படுத்தும் பொருட்டு சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவுவதற்கு அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது.
இது தொடர்பிலான கலந்துரையாடல் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் நடைபெற்றதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது சுயாதீன சட்டத்தரணி அலுவலகத்தை நிறுவுவதற்கான அடிப்படைத் திட்டங்களைத் தயாரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அமைச்சு இது தொடர்பிலான அடிப்படைக் கருத்துப் பத்திரத்தைத் தயாரித்த பின்னர், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களைப் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் உயர் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாரிந்த ரணசிங்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
