கிளிநொச்சி பகுதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண திசையிலிருந்து பயணித்த டிப்பர் வாகனமும், கிளிநொச்சி திசையிலிருந்து பயணித்த மற்றொரு டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மக்களை இறக்குவதற்கு குறித்த பகுதியில் தரித்து நின்ற வேளையில், அதனை டிப்பர் வாகனம் ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் சிக்குண்ட ஒரு டிப்பர் வாகனம் ரயில் மார்க்கத்தில் கவிழ்ந்த நிலையில், பெக்கோ இயந்திரம் மூலம் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விபத்து சம்பவத்தின் போது டிப்பர் வாகன சாரதிகள் காயமடைந்த நிலையில், பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
