காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை உள்ளிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்ட யோசனைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த நிலையில், அதன் பிறகு ஹமாஸ் காசா பகுதிக்கான அமெரிக்க அமைதித் திட்டத்திட்ட யோசனையின் முதலாவது நடவடிக்கையை ஏற்க ஒப்புக்கொண்டது.
அதன்படி, ஹமாஸ் அடுத்த திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும் என்று கூறப்படுகிறது.
இஸ்ரேல் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்கும் என்பதுடன், இஸ்ரேலிய படைகள் வரும் நாட்களில் காசா பகுதியின் சில பகுதிகளில் இருந்து பின்வாங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படைகள் பின்வாங்கும் நிலையில், உதவி பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகள் காசா பகுதிக்குள் நுழைய முடியும் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
