நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நீச்சல் தடாகத்தில் மூழ்கி நேற்று முன்தினம் (08) மாலை உயிரிழந்தான்.
குறித்த சம்பவம் தொடர்பில் சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சிறுவன் உட்பட குழு ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர் சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த ஐந்து வயது சிறுவன், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கியுள்ளான்.
இதனையடுத்து சிறுவன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், உயிரிழந்து காணப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று (9) இடம்பெற்றதுடன்,களுபோவில வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சடலம் தொடர்பாக திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அதன்படி குறித்த சம்பவம் தொடர்பாக முன்பள்ளியின் உதவி அதிபர், விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, பிள்ளைகளுக்கு பொறுப்பான இரண்டு ஆசிரியர்கள், முன்பள்ளி ஊழியர் ஒருவர் மற்றும் இரண்டு நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
