2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 06ஆம் திகதி அறிவிக்கப்பட்டு வருகின்றன.
உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்றையதினம் (10) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025ஆம் ஆண்டுக்கான நோபல்அமைதிப் பரிசை வழங்க நார்வே நோபல் குழு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை கடந்த 6 மாதங்களில் நிறுத்தியதாகவும் அதனால் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வழி மேல் விழி வைத்து காத்திருந்த நிலையில் அவரது கனவு பொய்த்துள்ளது.
இந்தநிலையில், ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்ட விவகாரத்தில் மரியாவையும், நோபல் தெரிவு குழுவினரையும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் கடுமையாக சாடியுள்ளார்.
செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து பல போர்களை முடிவுக்கு கொண்டுவருவார்.
அமைதி ஒப்பந்தங்களை மேற்கொள்வார், உயிர்களைக் காப்பாற்றுவார். அவர் மனிதாபிமானமிக்கவர், அவரின் முழு சக்தியால் மலைகளைக்கூட நகர்த்தும் வல்லமை மிக்கவர், அவரைப் போல யாரும் இருக்க மாட்டார்கள்.
நோபல் குழுவினர் அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர் எனப் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
