யாழ்ப்பாணம் பூநகரி, சங்குபிட்டி பாலத்தில் நேற்று முன்தினம் (12) பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியிருந்தது.
18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியிருந்ததாக்க கூறப்பட்டது.
எனினும் யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 36 வயதுடைய இரு குழந்தைகளின் தாயாரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் நேற்று (13) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த பெண்ணின் முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மிதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த பெண் பலரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படது.
எனினும் உடற்கூற்று பரிசோதனையின் போது அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்டது வெளியாகியுள்ளது.
குறித்த பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட உடல் பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலில் வீசப்பட்டுள்ளார். அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டமையால் உயிரிழந்துள்ளார் என உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் வீட்டை விட்டு புறப்படும்போது 10 பவுண் நகை அணிந்திருந்தார் என கூறப்பட்ட போதிலும், அவரது சடலத்தில் நகைகள் காணப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த பெண் வீட்டை விட்டு புறப்படும்போது, தனது நண்பியுடன் வவுனியா செல்வதாகக் கூறியிருந்தார். எனினும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின்படி, அந்தப் பெண் தனது கணவரிடம் கூறிய நபர்களுடன் சென்றதாகத் தெரியவில்லை.
அந்தப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாகச் செய்திகள் வெளியான போதும், உடற்கூறாய்வில் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
