யாழில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றிலும், மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை பெற்று யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல், வட்டிக்கு பணத்தினை வழங்கி அதனை திரும்ப செலுத்த தவறுபவர்களை கடத்தி சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுதல், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தல், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகள் ஊடாக சொத்துக்களை சேர்ந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் விசேட பிரிவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதன்படி முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்ப்பவர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்க பெற்று வருவதாகவும், அது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்போம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply