வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானம்- தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

முச்சக்கர வண்டிகள், பாடசாலைப் போக்குவரத்து சேவைகள் உட்பட ஏனைய வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பீ. ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார்.

இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முச்சக்கர வண்டிகள், பாடசாலை மற்றும் அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள், வாடகை வாகனங்கள் மற்றும் விசேட சுற்றுலாச் சேவைகள் ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கத்துடன் இந்தத் திட்டத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

பொதுவாக, இந்தப் பிரிவில் ஈடுபட்டுள்ள அதிக எண்ணிக்கையிலானவர்களின் பாதுகாப்புக்காக, ஒரு அரச சார்பற்ற போக்குவரத்துத் தொழிலாளர் சபையை ஒரு நிறுவனமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்கான ஆரம்பப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன- என பீ. ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி நிலான் மிருண்டா இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்:

முச்சக்கர வண்டிகள், பாடசாலை மற்றும் அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள், வாடகை வாகனங்கள் மற்றும் விசேட சுற்றுலாச் சேவைகள் ஆகிய பிரிவுகளில் தரவுகள் சேகரிக்கப்படும்.

இதற்காக அரச நிறுவனங்கள் மற்றும் வாகனத் தரிப்பிடங்களில் ஸ்டிக்கர் ஒன்றை நாங்கள் காட்சிப்படுத்துவோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி தகவல்களைச் சமர்ப்பிக்கலாம். இந்த போக்குவரத்துச் சேவைகள் தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் நடவடிக்கை நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்- என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply