வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் (Paul Richard Gallagher) இன்றையதினம் (3) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரிலேயே பால் ரிச்சர்ட் கல்லாகர் இலங்கை வருகை தரவுள்ளார்.
இன்று 3ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கும், வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 50ஆவது ஆண்டு நிறைவையொட்டியே இந்த பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது பேராயர் கல்லாகர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திப்பதுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.
இராஜதந்திர உறவுகளின் 50ஆவது ஆண்டு நிறைவைக் குறித்து, கொழும்பில் உள்ள காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறவுள்ள சிறப்பு நினைவு நிகழ்வில் பேராயர் கல்லாகர் உரை நிகழ்த்தவுள்ளார்.
மேலும் பேராயர் கல்லாகர் 2019ஆம் ஆண்டு உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் கள விஜயம் செய்வதும் இந்நிகழ்ச்சியில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
