தேயிலை கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மவுசாகலை தோட்டப் பிரிவை சேர்ந்த 50 வயதுடைய கிட்ணன் விஜயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மஸ்கெலியா பிளான்டேசன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான, மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் நேற்றிரவு 11.00 மணியளவில் கொழுந்து அரைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் அதிகாலை 1.30 மணியளவில் இயந்திர சில்லில் குறித்த தொழிலாளியின் ஆடை (சுவட்டர்) சிக்கியுள்ளது.
இந்த நிலையில் இயந்திரத்தில் விழுந்த நபர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவர்.
சம்பவத்தை அடுத்து அங்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதிபதி பார்த்த பின்னர் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
