முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின், விசாரணைக்கு முந்தைய மாநாட்டை நவம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (06) உத்தரவிட்டது.
அரசாங்கப் பணத்தைச் செலவிட்டு தரமற்ற இம்யூனோகுளோப்லின் தடுப்பூசிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவுக்குக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்றையதினம் நீதிபதிகள் பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலக ரத்னபண்டார ஆகியோரைக் கொண்ட மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்று காலை 8.30 மணியளவில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் இரண்டாம் பிரதிவாதியான கபில விக்ரமநாயக்க சார்பில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஏகநாயக்க, தனது கட்சிக்காரர் இன்று காலை நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பரீட்சை ஒன்றுக்குச் செல்ல அனுமதி கோரிய நிலையில், நீதிபதிகள் குழாம் அந்த வேண்டுகோளுக்கு அனுமதி வழங்கியது.
அதன்படி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின், விசாரணைக்கு முந்தைய மாநாட்டை நவம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (06) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
