சட்டவிரோதமாக இந்தியா சென்ற யாழைச் சேர்ந்த நபர் ஒருவர் இராமேஸ்வரத்தில் வைத்து இந்தியக் கியூ பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டம், வல்வெட்டித்துறை நடராஜன் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய கண்ணன் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இராமேஸ்வரம் பகுதியில் மறைந்திருப்பதாக இராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகி அவர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று அதிகாலை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில் கியூ பிரிவுப் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் சந்தேகத்திற்கிடமான முறையில் அமர்ந்திருந்த ஒருவரைக் கைது செய்து சோதனையிட்ட வேளையில் அவரிடம் இலங்கைப் பணம், இலங்கை கடவுச்சீட்டு மற்றும் இலங்கை அரச அடையாள அட்டை ஆகியவை இருப்பது தெரியவந்தது.
விசாரணையின் போது, கண்ணன் கடந்த 6 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் ஃபைபர் படகு ஒன்றில் புறப்பட்டு, இந்தியாவின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம் கடற்கரையில் வந்து இறங்கியுள்ளார் என்பது தெரியவந்தது.
பின்னர் அவர் அங்கிருந்து பேருந்து மூலமாக இராமேஸ்வரம் வந்துள்ளார்.
கண்ணன், மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள தனது மனைவியைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
மண்டபம் அகதிகள் முகாமிற்குச் செல்வதற்காக இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் காத்திருந்தபோதே, அவர் கியூ பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கண்ணனை இராமேஸ்வரம் நகரப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கியூ பிரிவுப் பொலிஸார், அவர் மீது கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வழக்குப் பதிவு செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட கண்ணனுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டு, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
