மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நடப்பட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கைதான மூவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பட்டிப்பளை பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர், தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர் ஆகிய மூவரும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் நேற்று (25) கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைதான மூவரும் இன்று (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்கள் சார்பில் சட்டத்தரணி விஜயகுமார் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
வழக்கை விசாரணை செய்த நீதவான் அண்ணத்துரை தர்ஷினி, மூவரையும் தலா 25000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.
அத்துடன், குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
