அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒருமில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணமாக பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
அதேபோல அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை அவசர நிவாரண உதவியாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தமது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
புயலால் பாதிக்கப்பட்டு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வரும் இலங்கை மக்களுடன் சீன மக்களும் பங்கெடுத்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் இலங்கை மக்கள் நிச்சயமாக இந்த அனர்த்தத்தில் இருந்து விரைவில் மீள்வார்கள் என நம்பிக்கை கொள்வதாகவும் இலங்கைக்கான சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்கான சீன வர்த்தக சம்மேளனம் மற்றும் வெளிநாட்டுச் சீனர்கள் சங்கம் ஆகியவை நன்கொடை முயற்சிகளை ஆரம்பித்துள்ளன.
இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக மொத்தமாக 10 மில்லியன் ரூபாவை சேகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
