தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்களையும் 4 யுவதிகளையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலகல, அத்துருகிரிய, கொட்டகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 31 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் கண்டி, நீர்கொழும்பு மற்றும் பூண்டுலோயா ஆகிய இடங்களைச் சேர்ந்த 21 முதல் 26 வயதுக்குட்பட்ட யுவதிகளே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 4134 மி.கி, ஹேஸ் 1875 மி.கி, குஷ் 2769 மி.கி, கொக்கேய்ன் 390 மி.கி, மஷ்ரூம் 804 மி.கி, போதை மாத்திரைகள் 13, சட்டவிரோத சிகரெட்டுகள் 12 ஆகியவை கைப்பற்றப்பட்டன.
கைதான சந்தேகநபர்கள் இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
