ஆர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இன்று (13) அதிகாலை இந்தியாவின் கொல்கத்தா நகரை வந்தடைந்தார்.
14 வருடங்களுக்குப் பின்னர் மெஸ்ஸி இந்தியா வந்துள்ளதுடன், அவரது இந்த விஜயம் ‘GOAT India Tour 2025’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மெஸ்ஸியின் வருகையை எதிர்பார்த்து, அவரை நேரில் காண்பதற்காக ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கொல்கத்தா விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.
அத்துடன், அவர் தங்கியுள்ள கொல்கத்தா நகர ஹோட்டலுக்கு முன்பாகவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக கொல்கத்தா நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள மெஸ்ஸியை வரவேற்கப் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், 70 அடி உயரமான அவரது உருவச்சிலை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மெஸ்ஸி தனது இந்திய விஜயத்தின் போது கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் நடைபெறும் விசேட நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை, கொல்கத்தாவில் இன்று நடைபெறும் அவரை வரவேற்கும் நிகழ்வில் பொலிவுட் சுப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மெஸ்ஸியின் இந்திய விஜயத்தின் போது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள 100 ரசிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு ரசிகரிடமிருந்து இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபாவிற்கு அண்மித்த தொகை அறவிடப்படுவதுடன், அதன் பெறுமதி இலங்கை நாணயத்தில் 35 இலட்சம் ரூபாவிற்கு அண்மித்ததாகும்.
