நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனிதாபிமான உதவியை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஜேர்மனி மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளிலிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு விசேட சரக்கு விமானம் ஒன்று இன்றையதினம் (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த போயிங் – 747 (Boeing-747) ரக பாரிய சரக்கு விமானத்தில் 5 இலட்சம் யூரோ (500,000 Euro) பெறுமதியான 69,000 கிலோகிராம் எடையுடைய அனர்த்த நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன.
இந்த விமானத்தில் கூடாரங்கள், சமையல் உபகரணங்கள், மெத்தைகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பெருமளவான நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக இலங்கைக்கான ஜேர்மனிய பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிபொன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
