மட்டக்களப்பு, பார் வீதியில் மரக்கறி வியாபாரி ஒருவரிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து மோசடி செய்த நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு, பார் வீதியின் ஓரத்தில் ‘பட்டா’ ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவரே இவ்வாறு மோசடிக்கு ஆளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வியாபாரி தெரிவிக்கையில்,
இன்று காலை ஒருவர் வந்து என்னிடம் மரக்கறி கொள்வனவு செய்தார். மரக்கறியைப் பெற்றுக்கொண்டு 5,000 ரூபா தாளைத் தந்துவிட்டு மிகுதிப் பணத்தையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். மரக்கறி வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நான் அந்த நாணயத்தாளைச் சரியாகக் கவனிக்காமல் மற்றைய தாள்களோடு வைத்துவிட்டேன்.
அதன் பின்னர் மற்றுமொரு வாடிக்கையாளருக்குப் பணம் கொடுப்பதற்காக அந்தப் பணத்தை எடுத்தபோதே, குறித்த 5,000 ரூபா நாணயத்தாள் சாதாரண கடதாசியில் அச்சிடப்பட்டிருந்த போலி நாணயத்தாள் என்பதை அறிந்தேன்- என்று தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் குறித்த வியாபாரி தெரிவித்தார்.
இவ்வாறான மோசடி நபர்கள் போலி நாணயத்தாள்களைப் புழக்கத்தில் விடக்கூடும் என்பதால், பணப் பரிமாற்றங்களின்போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
