கண்டி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை!

2025ஆம் ஆண்டில் கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்தார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்புக்கான நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தேசிய நடவடிக்கையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

இது மிகவும் ஆபத்தான ஒரு அச்சுறுத்தல். எமது சுற்றிவளைப்பு அறிக்கைகளின்படி, கண்டி பிரிவில் ஹெரோயின் பயன்பாடு 2025 இல் 1 கிலோ 200 கிராமினால் அதிகரித்துள்ளது. அதேவேளை, ஐஸ் போதைப்பொருள் பாவனை 5 மடங்காக அதிகரித்து, 3 கிலோ 23 கிராம் வரை உயர்ந்துள்ளது.

பயணிகள் போக்குவரத்துத் துறையில் உள்ள பெருமளவான ஊழியர்கள் இதற்கு அடிமையாகியுள்ளனர். நாம் சோதனையிட்ட 3 பேருந்துகளிலுமே சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் பாவித்திருந்தனர்.

இதன் பயங்கரம் என்னவென்றால், எம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத உயர் நிலையில் உள்ள பெண்களும் இதில் பலமாக ஈர்க்கப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர்களும் உள்ளனர் என்பதை வருத்தத்துடன் கூறவேண்டியுள்ளது.

இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஒரு பரிமாற்ற நிலையமாக மாறியுள்ளது. இந்த வலையமைப்பு வெளிநாடுகளில் இருந்தே இயக்கப்படுகிறது. ‘நுவர அக்கா’, ‘மாத்தளை அக்கா’, ‘குடு சைமா’ போன்றவர்களே கண்டிக்கு போதைப்பொருள் அனுப்பும் முக்கிய புள்ளிகள் ஆவர்.

பொலிஸாரால் மட்டும் தனித்து இதனை ஒழிக்க முடியாது எனவும், இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply