நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் பிரதிபலிக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் உள்ளன- ஜனாதிபதி!

நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் பிரதிபலிக்கும் முகமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயல்பாடுகள் முன்னோக்கி நகர்ந்துவருவதாக ஜனாதிபதி அனுகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

யாழ் வேலனையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஆட்சி மாற்றம் ஒன்றை நாட்டு மக்கள் விரும்பினார்கள் அதற்கு தமிழ் மக்களும் எம்மோடு கைகோர்த்து ஏற்படுத்திய அரசாங்கமே இன்று செயற்படுகிறது.

கடந்த கால அரசாங்கங்களில் மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அவர்களைப் புறந்தள்ளி புதிய அரசாங்கத்தை எம்மிடம் கையளித்தார்கள் அதனை நாம் ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

யாழ் மக்கள் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு தமது பங்களிப்பை வழங்கினார்கள் அவர்களின் எதிர்பார்ப்பை நாம் சிதறடிக்க மாட்டோம் என இந்தப் பொங்கல் நாளில் கூறி வைக்க விரும்புகிறேன்.

எமது பயணம் பல்வேறு சவால்கள் இடையூறுகளின் மத்தியில் நாட்டு மக்களுக்கு வழங்கிய ஆணையை யும் மக்களின் நம்பிக்கையையும் பலப்படுத்தும் முகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் பிரதிபலிக்கும் முகமாக எமது அரசாங்கத்தின் செயல்பாடுகள் முன்னோக்கி நகர்ந்துவருகின்ற நிலையில் இதைப் பொறுக்க முடியாதவர்கள் தேவையற்ற வதந்திகளை பரப்புகிறார்கள்.

ஆகவே தமிழ் மக்கள் குறிப்பாக யாழ் மாவட்ட மக்கள் எமது பயணத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் அவர்களின் நம்பிக்கையை சிதறடிக்காமல் பலப்படுத்துவோம் நீங்களும் எம்மோடு இணைந்திருங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் , நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா இளங்குமரன், ரஜீவன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் எம். பிரதீபன், கிளிநொச்சி அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன், முல்லத்தீவு அரசாங்க அதிபர் எஸ் .உமா மகேஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் கனகேஸ்வரன், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply