கடந்த கால ஜனாதிபதிகள் என்ன செய்தார்களோ அதைத்தான் இந்த அரசாங்கமும் செய்கிறது!

கடந்த கால ஜனாதிபதிகள் என்ன செய்தார்களோ அதைத்தான் இந்த அரங்கமும் செய்கிறது என தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளரும், யாழ். மாநகர சபையின் உறுப்பினருமாகிய சு.நிசாந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (16) அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வந்தால் மக்கள் கூட்டம் கூடுகின்றது என்ற மாயை காணப்படுகிறது. உண்மை அதுவல்ல. யாழ்ப்பாணத்தில் உள்ள அரச பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாகவே மக்கள் அங்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனால் மக்கள் பலமணி நேரம் பேருந்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அந்த பேருந்தில் இருந்தவாறு புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்துள்ளார். கிராம சேவகர் கூட நிகழ்வுக்கு மக்களை திரட்டி ஏற்றிச்சென்றார் என்றும் தகவல் வந்துள்ளது.

அதைவிட பிரதேச செயலகங்களில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்களும் அழுத்தத்தின் மத்தியில் ஜனாதிபதியின் நிகழ்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனால் சேவைகளை பெறுவதற்கு சென்ற மக்கள் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்தபோது என்ன செய்தார்களோ அதைத்தான் இந்த அரசாங்கமும் செய்கிறது.

இந்த அரசாங்கமானது தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக இன்றைய நிகழ்வில் செயற்பட்டிருக்கிறது.

இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகளை இந்த அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலை அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஒரு வருடத்திற்குள் ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இங்கு எந்தவிதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் தமது நிகழ்ச்சி நிரலை தெளிவாக வடக்கு கிழக்கில் முன்னெடுக்கிறது.

நீங்கள் சிங்கள மக்களை ஏமாற்றலாம், ஆனால் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. ஏனெனில் தமிழ் மக்கள் நீண்ட ஒரு போராட்டத்தை கடந்து வந்துள்ளார்கள்.

எனவே இன்றையதினம் (16) அரச உத்தியோகத்தர்களையும், அரச வாகனங்களையும் பயன்படுத்தியது சட்டவிரோதமான செயல் என்பதை நான் தெட்டத்தெளிவாக தெரிவிக்கின்றேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply