சட்டமா அதிபரை நீக்குவது குறித்தோ அல்லது அவருக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்தோ அமைச்சரவைக்குள் எவ்வித கலந்துரையாடலும் நடைபெறவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (22) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமூக வலைத்தளங்களில் அவ்வாறான செய்திகள் வெளியான போதிலும், சட்டமா அதிபரை நீக்குவது குறித்து அமைச்சரவையில் எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெறவில்லை. சமூக வலைத்தளங்களில் சிலர் சட்டமா அதிபரைப் பாதுகாக்க வேண்டும் என கருத்து வெளியிட்டு வருகின்றனர், இன்னும் சிலர் அவரை நீக்க வேண்டும் எனப் பதிவிடுகின்றனர்.
சட்டமா அதிபரை மாத்திரமன்றி, நீதி அமைச்சரையும் கூட வீட்டுக்கு அனுப்புமாறு சில சமூக ஊடகப் பதிவுகள் வெளியாகியிருந்தன.
எனக்கு ஒன்றுதான் சொல்ல வேண்டியுள்ளது, நீதி அமைச்சர் பற்றியோ அல்லது வேறு யாராவது பற்றியோ முறைப்பாடுகள் இருந்தால், இந்த நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானது. முறைப்பாடுகளைச் செய்யலாம்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடயங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சட்டமா அதிபரை நீக்குவது குறித்தோ அல்லது அவருக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்தோ அமைச்சரவைக்குள் எவ்வித கலந்துரையாடலும் நடைபெறவில்லை என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
