ராகம நகரத்தை மையமாகக் கொண்டு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
ராகம நகரத்தை ஒரு சுகாதார நகரமாகவும் கல்வி நகரமாகவும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
“ஜா-எல நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள ராகம சுகாதார நகரத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்குச் சட்டவிரோத கட்டுமானங்கள் தடையாக உள்ளன.
சுமார் ஆறு பேர் வரையில் இதனை ஆக்கிரமித்துள்ளனர்.
அதிகாரிகள் அங்கு சென்றபோது கூட சோதனையிட அவர்கள் இடமளிக்கவில்லை என்பது கலந்துரையாடல்களின் போது தெரியவந்தது.
பழைய அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அவர்கள் செயற்படுவதாகத் தெரிகிறது. இது ராகம நகர அபிவிருத்திக்கு தடையாகும். எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
ராகம நகரத்தை ஒருபுறம் சுகாதார நகரமாக மேம்படுத்த முடியும். அதேபோல் அங்கு மருத்துவக் கல்வி பயிலும் பெருமளவிலான மாணவ, மாணவிகள் உள்ளனர்.
கந்தானை பகுதியில் தாதியர் பாடசாலை ஒன்றும் உள்ளது. எனவே, இது ஒரு கல்வி மையமாகவும் மாறும்.
ராகம என்பது பல்வகை போக்குவரத்து சேவைகளைக் கொண்ட ஒரு இடமாகும். அங்கு புகையிரத நிலையம் உள்ளது, பேருந்து போக்குவரத்து சேவைகள் உள்ளன. எனவே, ராகம நகரத்தில் பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டம் எங்களிடம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
