வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
கொழும்பு தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வட திசையை நோக்கி காற்று வீசும்.
முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு ஊடாக களுத்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
