கடந்த அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் அதிகமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் 2029 வரை ஆட்சியில் இருக்க முடியாது என குறிப்பிட்ட எம்.பி அர்ச்சுனா, தற்போதைய அரசாங்கம் 2029க்கு முன்பு அகற்றப்பட்டால் அக்கட்சி ஆயுதங்களை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
ஏதேனும் காரணத்தால் அதிகாரத்தை இழந்தால், அவர்கள் இனி ஒரு தேசிய மக்கள் சக்தியாக செயல்படாமல் ஆயுதங்களை எடுக்க வேண்டிய அபாயம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிதி மோசடி மற்றும் ஊழல் விசாரணைகள் இதுவரை வெற்றிபெறவில்லை என்றும் அர்ச்சுனா ராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நினைத்தோம். ஊழல், மோசடி தொடர்பில் அதிகளவான கோப்புகள் இருப்பதாக கூறினார்கள்.
அந்த கோப்புகள் இப்போது எங்கே? உகாண்டாவில் இருப்பதாகக் கூறப்பட்ட பணம் எங்கே? ஈஸ்டர் தாக்குதல்களுக்கு நீதி எங்கே? அர்ஜுன மகேந்திரன் நாட்டிற்கு அழைத்துவரப்படமாட்டார்களா?” என்றும் கேள்வியெழுப்பினார்.
கடந்த அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் அதிகமாக உள்ளது என்றும் அர்ச்சுனா ராமநாதன் சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் ஆதரிக்க அவர் தன்னால் முடிந்தவரை முயற்சித்த போதிலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக வடக்கு மக்கள் இப்போது உண்மையை உணர்ந்து வருகின்றனர்.
தனக்கு தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லை என்றும், தான் சொல்வது உண்மை என்றும் அர்ச்சுனா ராமநாதன் எம்.பி குறிப்பிட்டார்.
மேலும் இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை தொடர்ந்து அளித்தால், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தன்னுடன் எதிர்க்கட்சியின் முன் வரிசையில் அமர வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
