பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (05) இடம்பெற்றுள்ளது.
அளுத்கம பாதாகொட மகா வித்தியாலயத்தில் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட வலதர மகா வித்தியாலய மாணவர்களுக்கும், அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வலதர மகா வித்தியாலய ஆசிரியை ஒருவரினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த தாக்குதலுடன் பிரதேசத்தைச் சேர்ந்த ஏனைய வெளிநபர்களும் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களில் ஒருவரின் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, அவருக்குச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
