மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு!

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றைய (06) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் ஒரு தீர்வைக் காண்பதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றைத் நியமிப்பதற்கான பிரேரணை கடந்த 2026 ஜனவரி 6ஆம் திகதி இந்த நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

ஜனவரி 6ஆம் திகதி முதல் எதிர்க்கட்சியானது தனது பிரதிநிதிகளாக ரஞ்சித் மத்துமபண்டார, நான் (மனுதாரர்), நிசாம் காரியப்பர் மற்றும் மனோ கணேசன் ஆகிய நான்கு பெயர்களையும் அனுப்பி வைத்துள்ளது. ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் கடந்தும் அரசாங்கம் இதுவரை தமது பெயர்களை அனுப்பவில்லை.

இது மாகாண சபைத் தேர்தல்களைத் தாமதப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தெளிவான நகர்வாகும். வெளிவிவகார அமைச்சர் இன்று காலை உள்நாட்டு பொறிமுறைகள் பற்றிப் பேசினார்.

வன்முறைகள் மீண்டும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த வேண்டுமாயின், குறைந்தபட்சம் ஏதாவதொரு அதிகாரப் பகிர்வு மாதிரியாவது இருக்க வேண்டும். ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு மாதமாகியும் அரசாங்கம் சார்பில் நீங்கள் இன்னும் பெயர்களை வழங்கவில்லை.

இது மாகாண சபைத் தேர்தல்களைத் தள்ளிப்போடும் ஒரு திட்டமிட்ட செயலாகும். பிரதமரும் இந்தச் சபையில் இருக்கிறார். பிரதமர் அவர்களே, தயவுசெய்து இதில் தலையிட்டு நடவடிக்கை எடுங்கள். எதிர்க்கட்சி தனது பெயர்களை ஏற்கனவே அனுப்பிவிட்டது என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply