ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், சென்கிளையார் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.
கொட்டகலைப் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்றும், தலவாக்கலையிலிருந்து கொட்டகலை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றுமொரு முச்சக்கர வண்டியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதில் கொட்டகலை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதியே பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், ‘1990’ அவசர அம்புலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தினால் இரண்டு முச்சக்கர வண்டிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
