அதி சொகுசு வாகனம் ஒன்றை பெற்றுத் தருவதாகக் கூறி, இரண்டு கோடியே இருபத்தி ஏழு இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் அரச நிர்வாக அமைச்சின் உதவி மேலதிக செயலாளர் ஒருவர் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை, நெதிமாலப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் சந்தேக நபர் ஏழு மாதங்களுக்கு முன்னர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையில் பணியாற்றியுள்ளார்.
அந்தச் காலப்பகுதியில், துறைமுக வளாகத்தில் ஏலத்திற்கு விடப்படும் வாகனங்களை சலுகை விலையில் பெற்றுத்தர முடியும் எனக் கூறி வைத்தியர் ஒருவரிடம் இருந்து இரண்டு கோடியே இருபத்தி ஏழு இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளார்.
எனினும் குறித்த பெண் அதிகாரி அந்த வைத்தியருக்கு வாகனத்தையோ அல்லது பணத்தையோ வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்தே கொழும்புப் பகுதியைச் சேர்ந்த வைத்தியர் கடந்த டிசம்பர் மாதம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை அடிப்டையாகக் கொண்டே குறித்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (20) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் அறிவுறுத்தலின் பேரில், நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையதிபதி பொலிஸ் பரிசோதகர் ராஜித வர்ணப்பிரியவின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் மெண்டிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
