கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கமேஜ நிலந்தவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைதான நபரிடம் இருந்து 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 44,000 ரூபா பணம் என்பன பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் சுதாரக தேவப்பிரிய பீரிஸ் என்பவரின் மைத்துனர் இவரென்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபரின் போதைப்பொருட்களை இலங்கைக்குள் விநியோகிக்கும் பணியை இச்சந்தேகநபர் முன்னெடுத்து வந்துள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
