வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மின்சார ஊழியர்களுக்கும் கடும் எச்சரிக்கை!

2024ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் (CEB) செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக தனியார் நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா (EDL) மற்றும் நெஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் ப்ரொவைடர் (NTNSP) ஆகிய நிறுவனங்களின் முகாமைத்துவம் அனைத்து ஊழியர்களுக்கும் கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைப் பகிர்வுத் திட்டத்தின்படி, அனைத்து மின்சார சபை ஊழியர்களும் உரிய 4 நிறுவனங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். தடையற்ற மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் சட்டப்பூர்வமாகத் தமது கடமைகளை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளனர் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2026 பெப்ரவரி 28ஆம் திகதி வெளியிடப்பட்ட 2477/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. எனவே பணிக்குச் சமூகமளிக்க மறுப்பது பாரதூரமான குற்றமாகும்.

சில ஊழியர்கள் பணிக்குச் சமூகமளிக்காமல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையை முதன்மை நிறைவேற்று அதிகாரிகளான பொறியியலாளர் எஸ்.ஐ. குமார மற்றும் பொறியியலாளர் என்.எஸ். வெத்தசிங்க ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய நிறுவனங்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்ற போதிலும், அதன் மூலம் ஊழியர்கள் தமது உடனடிக் கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள் என முகாமைத்துவம் தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவைப் புறக்கணிப்பவர்களுக்கு எதிராக, அத்தியாவசிய சேவை விதிமுறைகளின் கீழ் கடும் ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply