யாழ். பல்கலையில் தேசிய கொடியை இறக்கி, கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம்- முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி, கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (19) யாழ். பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விவகாரம் தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்படி கடந்த 10ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தினுள் பொலிஸார் வாகனத்தில் நுழைந்து, துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் மூன்று மணி நேர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பதிவு செய்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தினுள் பொலிஸார் வாகனத்தில் நுழைந்தமை மற்றும் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடம் மூன்று மணி நேர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமைக்கு எதிராக மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கறுப்பு கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மூவரை கடந்த 17ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு பதிவாளர் ஊடாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பாணை விடுத்தனர்.

குறித்த விசாரணைக்கு மாணவர்கள் அன்றைய தினம் செல்லாத நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்புக்கு அமைய பல்கலைக்கழக மட்டத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மாணவர்கள் தரப்பு நியாயங்களை தெளிவாக விசாரணை குழு முன்பாக தெரியப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பிறிதொரு தரப்பினராக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்களை விசாரணைக்கு அழைத்தனர். இது மாணவர்களை அச்சுறுத்தும் செயற்பாடு என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

எனவே குறித்த சம்பவம் தொடர்பில் மாணவர்களை பொலிஸார் விசாரணைக்கு அழைக்கும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் பல்கலை முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை தொடர்ந்து பொலிஸார், மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவர்களாயின் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என மாணவர்கள் தெரிவித்துள்னர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply