ஏற்றுமதித் துறைக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி!

ஏற்றுமதித் துறைக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கவனம் செலுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இத்துறையின் பிரதான ஏற்றுமதியாளர்கள் மற்றும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது,

ஏற்றுமதித் துறைக்கும், உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து, உருவாகியுள்ள சூழ்நிலையை முகாமைத்துவம் செய்வதற்காக ஏற்றுமதித் துறைக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இத்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பாக ஏற்றுமதியாளர்கள் மற்றும் இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply