புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள அரச விடுமுறை தினத்தை திங்கட்கிழமைக்கு மாற்றுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற மத்தியகிழக்கு போரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையால் வாரம்தோறும் புதன்கிழமை அரச விடுமுறை தினமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான 4 தினங்கள் கூடும் நிலையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள அரச விடுமுறை தினத்தால் தூரப்பிரதேசங்களிலிருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படுகின்றனர் .
நாடாளுமன்ற விடயங்களை ஜனாதிபதி தீர்மானிப்பதில்லை. எனவே மக்களின் அதிக பிரச்சினைகள் பேச வேண்டியிருப்பதனால் நாடாளுமன்றம் தொடர்ந்தும் 4 தினங்களும் கூடும் வகையில் புதன்கிழமை அரச விடுமுறை தினத்தை திங்கட்கிழமைக்கு மாற்றுமாறு சபாநாயகரைக் கோருகின்றேன்- என தெரிவித்திருந்தார்.
