சங்கிலியன் தோரண வாசல் திறப்பு விழா நாளை

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழா நாளை மாலை 5.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்,பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கலந்துகொள்ளவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், சிவபூமி அறக்கட்டளை நிறுவுனர் ஆறு திருமுருகன், தொல்பொருள் திணைக்கள யாழ்ப்பாண உதவி பணிப்பாளர் யு.ஏ.பந்துலஜீவ ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன், நல்லூர் பிரதேச செயலாளர் அ.எழிலரசி, யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவை தொடர்ந்து மந்திரிமனை அரங்கில் கலைநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சங்கிலியன் தோரண வாசல் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினால் புனரமைக்கப்பட்டது.

மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போகாமல் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு அந்த மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைக்க வேண்டிய தார்மீகக் கடமையுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் முன்னெடுக்கப்பட்ட முதலாவது செயற்றிட்டம் இதுவாகும்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply