வடக்கில் ஒருநாள் சேவையில் அடையாள அட்டை! அமைச்சர் தகவல்

வடக்கு மாகாணத்தில் தேசிய அடையாள அட்டையை பெறுவது குறித்து விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டையை பெறுவதில் வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று நாடளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதோடு மேலும்,

“வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள ஒருநாள் வேலைத்திட்டத்திற்கு விண்ணபிப்பவர்களின் வீதம் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

2023 ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் ஒருநாள் சேவையில் பெற்றுக்கொண்ட விண்ணப்பங்கள் 4968 ஆகும். மொத்த விண்ணப்பங்கள் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 596 ஆகும். இது நூற்றுக்கு 4 சதவீதம் ஆகும்.

விசேட தேவையின் நிமித்தம் அடையாள அட்டையை பெற்றுக்கொள்பவர்கள் பிரதான அலுவலகத்திற்கு செல்ல முடியும். வவுனியா ஆட்பதிவு திணைக்களத்தில் சேவைகள் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றன.

இருப்பினும் ஒருநாள் சேவையை வவுனியா ஆட்பதிவு திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள இடவசதி போதாமல் காணப்படுகின்றது. இதற்காக வேறு ஒரு இடத்தை ஆட்பதிவு திணைக்களத்திற்காக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply