கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூற்றாண்டையொட்டி கல்விசார் ஆய்வுமாநாடு

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு நிறைவையொட்டி நடத்தப்படும் கல்விசார் ஆய்வு மாநாடு எதிர்வரும் 09.10.2023 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கோப்பாயில் கலாசாலை நிறுவப்படுவதற்கு பின்புலமாக இருந்த சேர் பொன் இராமநாதன் பெயரிலும் காரைநகர் ச.அருணாசலம் உபாத்தியாயர் பெயரிலும் இரு அரங்குகள் அமைக்கப்பட்டு ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

மாநாட்டின் தொடக்க நிகழ்வு பொது அரங்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியற்துறைத் தலைவர் கலாநிதி ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமையில் இடம்பெறும் இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி ஆய்வரங்கத் திறப்புரையையும் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் வாழ்த்துரையையும் வழங்குவர்.

ஆய்வுக்கட்டுரை அறிக்கைகளின் முதல் அமர்வு கலாசாலைக்கென காணியை வழங்கிய சேர் பொன் இராமநாதன் அரங்காக – யாழ். பல்கலைக்கழக கல்வியியற்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆ. நித்திலவர்ணன் தலைமையில் நடைபெறும்.

கோப்பாயில் ஆசிரிய கலாசாலையை நிறுவதற்கு அடித்தளமிட்ட காரைநகர் ச. அருணாசலம் உபாத்தியாயர் பெயரில் இரண்டாவது அரங்கு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சு. பரமானந்தம் தலைமையில் நடைபெறும்.

பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக, தேசிய கல்விநிறுவக, கலாசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் விரிவுரையாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கிய 150 பக்கங்கள் கொண்ட ஆய்வு மாநாட்டு மலரும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாகவும் ஆய்வரங்க இணைப்பாளரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளருமாகிய சின்னையா மனோகரன் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply