சட்டவிரோத கல்வி நிலையம் மீது பொலிஸார் சோதனை; பெண் ஒருவர் கைது!

பம்பலப்பிட்டி லோரிஸ் வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கல்வி நிறுவனமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் என கூறப்படும் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய கிரியுல்ல நாரங்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

“Evolve College of Education” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனம், நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களை உள்வாங்குவதற்கும், இணையம் மூலமான கருத்தரங்குகளை நடத்துவதற்கும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு தேவையான டிப்ளோமாக்கள் மற்றும் உயர் டிப்ளோமாக்கள் போன்ற கல்வித் தகுதிகளை வழங்குவதாகவும் சமூக ஊடக தளங்களில் விளம்பரம் செய்துள்ளது.

இதேவேளை, சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாமல் கல்வியை வழங்கிய பிறகு போலி டிப்ளோமா சான்றிதழ்களையும் நிறுவனம் வழங்கியுள்ளது.

குறித்த நிறுவனம் உள்ளூர் மற்றும் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யாமல் செயற்பட்டு பாடத்தின் வகையைப் பொறுத்து ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் 2000 ரூபாய் வரையிலான பணத்தை பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பண மோசடி தொடர்பாக இதுவரை காவல்துறைக்கு மொத்தம் 43 புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறித்த நிறுவனம் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அனுமதியையும் பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1,000 நபர்கள் இந்த மோசடிக்கு இரையாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த நிறுவனத்தின் இணைப் பணிப்பாளராக செயற்பட்டு தற்போது தலைமறைவாகவுள்ள மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply