யாழ்ப்பாணம் வருகை தரும் பிரித்தானிய இளவரசி: ஊடகவியலாளர்கள் விசனம்!

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் இளவரசி விஜயம் செய்யும் இடங்களில் பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் வலையொளி அலைவரிசை உள்ளிட்ட நால்வருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு இளவரசி வருகைதரவுள்ள நிலையில் செய்தி சேகரிக்க சென்ற பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டமை ஊடகவியலாளர்கள் இடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதயன் பத்திரிகை , வலம்புரி பத்திரிகை, சக்தி தொலைக்காட்சி, டான் தொலைக்காட்சி, ஹிரு தொலைக்காட்சி, தெரண தொலைக்காட்சி, சூரியன் வானொலி உள்ளிட்ட பல பிரதான ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அத்துடன் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவை சேர்ந்தவர்களுக்கும் அனுமதியளிக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் பிரித்தானிய தூதரகத்தை ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது யாழ்ப்பாணத்தில் இயங்கும் அறக்கொடை நிலையம் ஒன்றின் ஊடகப் பொறுப்பாளரே நான்கு பெயரை சிபாரிசு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply