ஊடக அடக்கு முறைக்கு எதிராக வீதியில் இறங்கிய ஊடகவியலாளர்கள்

ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமாக்கப்பட்டு , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் மாபெரும் கறுப்புப் பட்டி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இன்றைய தினம் (27.01.2024) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, கடத்தப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி வேண்டும், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து, ஊடக அடக்கு முறையை நிறுத்து போன்ற கோசங்களை எழுப்பியவாறு தலையில் கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, கறுப்பு ஜனவரியை அனுஸ்டிக்கும் முகமாக இன்று நாடளாவிய ரீதியில் ஊடக அமைப்புகள், போராட்டங்களையும் அனுஸ்டிப்பு நிகழ்வுகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply