மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் மறு அறிவித்தல் வரும் வரையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அவசர சிகிச்சைப்பிரிவு சேவைகளுக்கான கடமைகளில் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில், வெளிநோயாளர்களுக்கான மருந்தக உத்தியோகத்தர்களும் கடமையை பகிஷ்கரித்துள்ளதுடன் மருந்தகமும் மூடப்பட்டுள்ளது.
நேற்றையதினமும் வைத்தியசாலை ஊழியர்கள் முதற்கட்டமாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு – ஏறாவூர் மற்றும் செங்கலடி வைத்தியசாலைகளுக்கு இன்று சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் வைத்திய சேவை ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் இரண்டாவது நாள் பணிப்பகிஷ்கரிப்பினால் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.
இன்று இரண்டாவது நாளாகவும் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளிகள் வைத்திய சேவையைப் பெற பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் இன்று வைத்தியர்கள் மாத்திரம் கடமைக்கு வருகை தந்திருந்தனர். OPD வெளி நோயாளர் பிரிவுப் பகுதியில் பல மணித்தியாலயமாக நோயாளிகள் காத்திருந்ததுடன், சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன் மருந்து வழங்கும் பிரிவு முற்றாக இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் வைத்திய சேவை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பால் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்கள் திரும்பிச் செல்லும் அவல நிலை காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
