சடலமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் பிள்ளைகள்!

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பிரதேசத்தில், நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு மகள்களின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த தாயின் இரண்டாவது கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் மூவரும் கல்வல பகுதிக்கு நீராடச் சென்ற நிலையில், குறித்த பெண்ணின் சடலம் பிரதேச மக்களால் மீட்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று காலை இரண்டு பிள்ளைகளின் சடலங்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன திஸ்ஸமஹாராமய சமகுலிய பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.பி. மனோரி சுரங்கிகா என்ற 32 வயதான தாய் மற்றும் 9 வயதான தேவ்மி தெஹன்சா மற்றும் 14 வயதான நேத்மி நிமான்சா ஆகிய மூவரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கொடிகஹவெவ பிரதேசத்தில் குழாய் நீர் இல்லாததால் அப்பகுதி மக்கள் தண்ணீர் தேங்கிய இடங்களுக்கு சென்று ஆடைகளை துவைத்து குளிப்பதை வழமையாக கொண்டிருக்கின்றனர்.

இதன்படியே, நேற்று முன்தினம் மாலை 5.00 மணியளவில் இந்த இரண்டு பிள்ளைகளும் தாயும் ஆடைகளை துவைக்கவும் குளிக்கவும் கல்வல நோக்கிச் சென்றதை பிரதேசவாசிகள் கண்டுள்ளனர்.

கணவர் பணிக்கு சென்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் எவரும் இல்லாத நிலையில் ​, குவாரிக்கு அருகில் இருந்த ஆடைகள், பிள்ளைகளின் செருப்பு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கிராம மக்கள் ஒன்று திரண்டு காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டதாகவும், அன்றிரவு தாயாரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு, அனுமதிச் சட்டத்தை மீறி குவாரி நடத்தப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் குவாரி மூடப்பட்டுள்ளது.எனினும் இருபது அடிக்கு மேல் ஆழமாக தோண்டப்பட்ட குவாரியை மூட உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தநிலையில், குவாரியை மூடியிருந்தால் இதுபோன்ற விபத்து நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

உயிரிழந்த இரண்டு பிள்ளைகளும் கவுந்திஸ்ஸபுர மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருவதாகவும், மூத்த மகள் நெத்மி நிமான்சா ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவி எனவும், நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் தேவ்மி தெஹன்சா வகுப்பறையில் புத்திசாலியான பிள்ளை எனவும் அதிபர் ஹர்ஷ கட்டகே தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply