
யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர் ஒருவர் அங்கு கடமையிலிருந்த காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று (19) மாலை இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே இவ்வாறு கடித்து காயப்படுத்தியுள்ளார்.
35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு காயப்படுத்தியுள்ளார்.
குறித்த நபர் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த காவலாளி யாழ். போதனா வைத்தியசாலை விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.