
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்களை வழங்குமாறு கோரி இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து, காந்தி பூங்காவில் ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள்,
அரச நியமனத்தினை உறுதிப்படுத்து.
பாரபட்சம் காட்டாதே.
எமது கனவுகளை அழிக்காதே.
வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும்.
போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2000க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதாகவும், அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பல்வேறு கனவுகளுடன் பல கஷ்டங்களுக்கு மத்தியில் பட்டப்படிப்புகளை முடித்துள்ள போதிலும் இதுவரை தமது வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் பழைய கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்த பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.