
யாழ்ப்பாணத்திலிருந்து- முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது இன்று (19) இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
யாழ்ப்பாணத்திலிருந்து- முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள், வாடகை அடிப்படையில் வாகனம் ஒன்றினைப் பெற்று அதில் பயணம் செய்து வந்துள்ளனர்.
வழமை போல இன்றைய தினமும் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளையில், பளை பகுதியில் வைத்து குறித்த வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தின் போது ஆசிரியர்களுக்கு எதுவும் நிகழவில்லை.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய பொலிசாரின் செயற்பாட்டுக்கும், ஆசிரியர்கள் மீதான இன்றைய தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாகவே பாரிய சந்தேகம் எழுகின்றது என்று இச்சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடமாகாண ஆளுநர் உடனடியாக இச்சம்பவம் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கையை மேற்கொண்டு, குறித்த குற்றத்தைப் புரிந்தவர்களையும் உடந்தையாக செயற்பட்டவர்களையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் ஆசிரியர்களின் போக்குவரத்து மற்றும் விடுதி வசதிகள் குறித்து எந்தவொரு கரிசனையும் அற்று செயற்படும் அரசாங்கம், ஆகக்குறைந்தது ஆசிரியர்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கேனும் ஆவனம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.